ஈப்போ
ஈப்போ, கம்போங் டூசுன் பெர்த்தாம் ஶ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின் 15 தெய்வச் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் வட்டார மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த அசம்பாவிதம் சனிக்கிழமை காலை 1.50 மணிக்கு நேர்ந்ததாக பேரா போலீஸ் துணைத் தலைவர் லிம் ஹோங் சுவான் தெரிவித்தார்.
ஆலயத்தின் 9 நவகிரக சிலைகளோடு சுற்றறுப்புறத்தில் இருந்த ஆறு தெய்வச் சிலைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
அந்த 25 வயது இந்தோனேசிய ஆடவன் காலை 4.15 மணிக்குப் பொதுமக்களின் உதவியோடு கைது செய்யப்பட்டான். சிலைகளை உடைக்க பயன்படுத்திய இரும்பிலான ஸ்பானர் கைப்பற்றப்பட்டது.
அந்த ஆடவன் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மனநிலை குன்றியதாகவும் தெரிய வருகிறது. மேலும், அந்த நபர் தமது முதலாளியிடமிருந்து ஓடிவந்து விட்டதாகத் தெரிகிறது.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம், பிரிவுகள் 295, 427, 448 மூலமும், குடிநுழைவுச் சட்டம் பிரிவு 6(3)இன் கீழும் விசாரணை நடத்தப்படும்.
பொதுமக்கள் இது சம்பந்தமாகத் தப்பான யூகங்களைப் பரப்ப வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.
ஆலயச் செயலாளர் மலர்கோவனும் தலைவர் தனபாலனும் தகவல் கிடைத்து ஆலயத்துக்குச் சென்று பார்த்தபோது 15 தெய்வச் சிலைகள் உடைக்கப் பட்டிருப்பதைக் கண்டு கம்போங் ராப்பாட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அந்த ஆலயத்தில் 2007ஆம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேஹம் செய்யப்பட்டபொது அந்தச் சிலைகள் தமிழ் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டதாகவும் சிலைகளின் சேதம் சுமார் 80,000 ரிங்கிட் எனவும் கணிக்கிடப்பட்டுள்ளது.