கோலாலம்பூர், டிங். 3-
கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதுவும் கொண்டுவருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கட்சியின் தொடர்புப் பிரிவு இயக்குநர் ஃபாமி ஃபாட்சில் கூறினார்.
வரும் டிசம்பர் 5 முதல் 8ஆம் தேதி வரை மலாக்கா நகரில் கெஅடிலான் மாநாடு நடைபெறுகிறது. டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் இளைஞர் – மகளிர் அணி கூட்டங்களைக் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா தொடக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்சியின் துணைத் தலைவர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அஸ்மின் அலிதான் அந்த இரண்டு கூட்டங்களையும் தொடக்கிவைக்க வேண்டும். அப்படி நடைபெறவில்லை என்றால் அனுவாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரத் தயங்க மாட்டோம் என இளைஞர் அணியைச் சேர்ந்த சில தலைவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்பதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது என்றார் ஃபாமி ஃபாட்சில்.
கெஅடிலான் தேசிய மாநாட்டில் என்னென்ன தீர்மானங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது முடிவாகிவிட்டது. தீர்மானங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய காலமும் முடிந்துவிட்டது. நம்பிக்கையில்லா வாக்களிப்பு தொடர்பான எந்தத் தீர்மானமும் எங்கள் பார்வைக்கு வரவில்லை என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.