பிரிட்டிஷ் இளவரசர் தம்பதி அதிரடி அறிவிப்பு
லண்டன் –
மூத்த அரச குடும்பத்தினர் எனும் அந்தஸ்தை குறைத்துக் கொண்டு ஓர் அடக்கமான வாழ்க்கையை வாழ தாங்கள் முடிவு செய்துள்ளதாக பிரிட்டிஷ் இளவரசர் ஹெரியும் அவரின் துணைவியார் மேகனும் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இது அரச குடும்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி விஷயத்தில் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம். முற்போக்குடைய ஒரு புதிய வாழ்க்கையை நாங்கள் தேர்ந்தெடுத்திருப்பதால், பிரிட்டனிலும் வட அமெரிக்காவிலும் எங்களின் நேரத்தை மாறி மாறி கழிக்கப் போகிறோம் என்று தங்களின் இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் அத்தம்பதியர் தெரிவித்துள்ளனர்.
இளவரசர் ஹெரியும் (வயது 35) சசேக்ஸ் கோமகள் எனும் அரச பட்டத்தைக் கொண்டிருப்பவரான மேகனும் (வயது 38) கடந்த 2018ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை உள்ளது. முன்னாள் நடிகையான மேகன் அமெரிக்காவில் பிறந்தவர் ஆவார். அவரின் தாயார் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்.
இதனால், இனத்துவேஷத்திற்கு மேகன் ஆளாகி வருகிறார். குறிப்பாக, சமூக ஊடகங்கள் அவரைக் கடுமையாகக் கேவலப்படுத்தி வருகின்றன. பிரிட்டிஷ் மற்றும் அனைத்துலக பத்திரிகைகளும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்து வந்துள்ளன. இது குறித்து ஹெரி ஏற்கெனவே கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
பல மாதங்களாக கலந்தாலோசித்த பிறகு இம்முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் எனும் அந்தஸ்திலிருந்து நாங்கள் ஒதுங்கிக் கொள்கிறோம். ஆனால், அரசி இரண்டாவது எலிசபெத்திற்கு எங்களின் முழுஆதரவு எப்போதும் உண்டு என்று அத்தம்பதியர் குறிப்பிட்டுள்ளனர்.
எலிசபெத்தின் பேரப்பிள்ளையே ஹெரி ஆவார்.