புத்ராஜெயா –
சீனாவில் இருந்து தாயகம் திரும்பிய மலேசியர்களுள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த நோய்க்கு ஆளான மலேசியர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்வு கண்டிருக்கிறது.
சீனாவில் உள்ள ஹுபே மாநிலத் தலைநகர் வுஹானில் தோன்றிய இந்த விஷக் காய்ச்சல் காரணமாக இதுவரை 500 பேர் பலியாகி விட்டனர்.
அந்த நகரில் சிக்கிக் கொண்ட மலேசியர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கிருந்து 107 மலேசியப் பிரஜைகள் சிறப்பு விமானம் மூலம் தாயகம் கொண்டு வரப்பட்டனர்.
அவர்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தந்தைக்கும் மகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அமாட் தெரிவித்தார்.
அந்த இருவரும் சிரம்பானில் உள்ள துங்கு ஜபார் பெரிய மருத்துவனையில் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஸுல்கிப்ளி கூறினார்.