கொழும்பு –
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக அமல்படுத்தினால்தான் தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என்பதை புதுடில்லி சென்றிருந்த இலங்கைப் பிரதமர் மகிந்தவிடம், மோடி திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார்.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை வரவேற்கின்றோம். இந்தியாவின் இந்த வேண்டுகோளை ராஜபக்ச அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அவர் சொன்னார்.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு இனியும் அலட்சியம் செய்ய முடியாது என்றார் அவர்.
இலங்கைத் தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அவர்களின் பிரச்சினை பற்றி திறந்த மனத்துடன் பேச வேண்டும்.
தமிழர்களுக்கு நீதி, சமத்துவம், சமாதானம் வழங்கப்பட வேண்டும். இதுவே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. இதனை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.