பிரதமர் வேட்பாளர் அன்வார்

நம்பிக்கைக் கூட்டணி திட்டவட்டம்

பெட்டாலிங் ஜெயா –

நாட்டின் 8ஆவது பிரதமர் பதவிக்கு கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பெயரை மட்டுமே பரிந்துரை செய்திருக்கிறோம் என்று நம்பிக்கைக் கூட்டணி தோழமைக் கட்சிகள் தெரிவித்தன.

நேற்று இஸ்தானா நெகாராவில் மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவை நம்பிக்கைக் கூட்டணி தோழமைக் கட்சி எம்பிகள் சந்தித்தனர்.
எங்கள் கூட்டணி சார்பில் பிரதமர் பதவி வேட்பாளராக அன்வாரின் பெயரை மட்டுமே முன்மொழிந்தோம் என்று அவர்கள் கூறினர்.

இந்நிலையில் நேற்று மாலை 5.45 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள கெஅடிலான் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அன்வாரும் நம்பிக்கைக் கூட்டணித் தோழமைக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது அன்வார் கூறியதாவது:

“நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்ததை அடுத்து மூண்டிருக்கும் பிரச்சினைகளுக்குச் சுமுகமான முறையில் தீர்வு காணவே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இதற்காக பிப்ரவரி 25ஆம் தேதி நம்பிக்கைக் கூட்டணி தோழமைக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம். இடைக்காலப் பிரதமரான துன் டாக்டர் மகாதீரை இந்தக் கூட்டத்திற்குத் தலைமைதாங்கும்படி கேட்டுக்கொண்டோம்.

மீண்டும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். அதற்கு துன் மகாதீர் துணை புரிய வேண்டும் என்று கோரினோம். ஆனால், அதற்கு மகாதீர் இணக்கம் தெரிவிக்கவில்லை. மேலும் அந்தக் கூட்டத்தையும் அவர் புறக்கணித்துவிட்டார்.

மாமன்னரைச் சந்தித்தபோது நம்பிக்கைக் கூட்டணியைச் சேர்ந்த எல்லா 92 எம்பிகளும் எனக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்தனர்.” இவ்வாறு அன்வார் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணியில் ஜசெக 42 இடங்களையும் கெஅடிலான் 39 இடங்களையும் அமானா 11 இடங்களையும் வைத்திருக்கின்றன. ஆனாலும் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு 112 எம்பிகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here