கெடா சுங்கைப்பட்டாணி வட்டாரத்தில் உள்ள மூன்று தமிழ்ப்பள்ளிகளின் 100 மாணவர்களுக்கு வெ.10,000 நிதியுதவியியை தமிழ்ப் பள்ளி மாணவர் உதவிநிதி வாரியம் வழங்கியது. சுங்கைப்பட்டாணியில் உள்ள மகாஜோதி தமிழ்ப்பள்ளி, புக்கிட் கட்டில் சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளி, சுங்கைப்பட்டாணியில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ள கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றுக்கு தமிழ்ப்பள்ளி மாணவர் உதவிநிதி வாரியத்தின் தலைவர் வே.விவேகானந்தன் தலைமையில் அறங்காவலர்களான கே.ஏ. குணா, ம.பரமசிவம் ஆகிய மூவரும் கடந்த ஜனவரி 30ஆம் தேதி நேரில் வருகை புரிந்து இந்த உதவிநிதியை வழங்கினர்.
நெடுஞ்சாலையிலிருந்து குறுகலான காட்டுப் பாதையில் 3 கிலோமீட்டர் தூரத்தில் பாலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள கத்தும்பா தோட்டப் பள்ளியில் மொத்தம் 35 மாணவர்களே படிக்கின்றனர். அத்தோட்டத்தில் வசிக்கும் மூன்று தமிழ்க்குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே அப்பள்ளியில் படிக்கின்றனர். மற்ற 32 மாணவர்களும் 30 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இடங்களிலிருந்து வேன் மூலம் தினமும் கொண்டுவரப்படுகின்றனர். அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் தினமும் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோலா கட்டிலிருந்தும், 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சுங்கைப்பட்டாணியிலிருந்தும் வருகின்றனர். இவர்களின் இந்த அரிய முயற்சிகளையும், உழைப்பையும் நிதி வாரியத்தின் அறங்காவலர்கள் பாராட்டினர்.
சுங்கைப் பட்டாணியில் உள்ள ஒரு கடைக்கு கத்தும்பா தோட்டப் பள்ளி மாணவர்கள் 35 பேரும் ஒரு வேனில் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்குத் தேவையான புறப்பாட நடவடிக்கைச் சீருடைகள் வாங்கிக் கொடுக்கப்பட்டன. முன்னதாக அந்தப் பள்ளியில் நடந்த சந்திப்புதிரு. ஞானபிரகாசம், இவ்வளவு தூரம் வந்து உதவி வழங்கும் நிதி வாரியத்தின் அறங்காவலர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். இந்த நிதி வாரியத்தின் தலைவர் விவேகானந்தன் பேசுகையில், உதவி பெரும் மாணவர்கள் நன்கு படித்துத் தேர்ச்சி பெற்று வாழ்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று வாழ்த்தினார். ஒதுக்குப்புறமான பள்ளிகளான கத்தும்பா மற்றும் சுங்கை பெக்காகா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவித் தேவைப் படுகிறது என்ற கோரிக்கையை ஏற்று, தமிப்பள்ளி மாணவர் உதவிநிதி வாரியம் நிதிஉதவி வழங்கியதற்கு ஆசிரியர் திரு. எம்.எ.இராமசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பின்னர், மகாஜோதி தமிழ்ப்பள்ளியிலும் புக்கிட் கட்டில் சுங்கை பெக்காகா தமிழ்ப்பள்ளியிலும் நடந்த நிதி வழங்கும் நிகழ்ச்சிகளில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்துக் கொண்டனர். இம்மாணவர்கள் தங்களுக்குத் தேவையான சீருடைகள், புத்தகங்களை வாங்கிக் கொள்ளவதற்கு பற்றுச்சீட்டுகளை நிதியின் அறங்காவலர்கள் வழங்கினர். இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் திரு.பத்மநாதன், துணைத் தலைமை ஆசிரியர் திரு.கோபாலகிருஷ்ணன் இந்த நிதியுதவிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதுடன், வரும் ஆண்டுகளிலும் இந்த நிதியுதவி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
மகாஜோதி தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்குமிடையே சிறந்த, அன்பான உறவுகள் இருந்தால்தான் மாணவர்கள் கல்வியில் சிறந்த தேர்ச்சியினை அடைய முடியும் என்று கே.ஏ.குணா தமது உரையில் வலியுறுத்தினார். ஒய்.எஸ்.எஸ். எனப்படும் சமூகநல அறவாரியத்தின் மனோவியல் அறிவுரையாளருமான குணா நிகழ்த்திய உரை மாணவர்களையும் பெற்றோர்களையும் கவர்ந்தது.