கோவிட்-19 உலகளவில் பரவி மக்களின் வாழ்வாதரத்திற்கு பெரும் மிரட்டலை விடுத்து வருகிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள் தம் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் இருக்கின்றனர்.
நாளுக்கு நாள் கோவிட்-19 வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் விமான சேவைகள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவைகள் நிறுத்தபட்டது. அதனால் 1,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிக்கி தவிக்கின்றனர்.
அவர்களை மீட்டு வர மஇகாவின் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே புனித பயணம் மேற்கொண்ட 55க்கும் மேற்பட்ட மலேசியர்களின் பெயர் பட்டியல் விடுபட்டிருக்கும் விஷயம் மக்கள் ஓசைக்கு தெரிய வந்தவுடன் உடனடியாக மனிதவளத் துறை டத்தோஶ்ரீ சரவணனிடம் தெரிவிக்கப்பட்டது.
செய்தி அறிந்தவுடன் அவர் சம்பந்தப்பட்ட இலாகாவுடன் தொடர்புக் கொண்டு விடுபட்ட 55 பேரையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதனை காணும்போது மஇகாவின் உதவும் மனப்பான்மையும் மக்கள் ஓசை கொண்டிருக்கும் அக்கறையையும் புலப்படுத்துவதாக கோலாலம்பூர் பத்திரிகை விநியோகதரான கு.சிதம்பரம் புகழாரம் சூட்டினார்.
சமூக கடப்பாட்டுடன் மக்கள் ஓசை நாளிதழ் செயல்பட்டு இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தனது சேவையை தொடருவதற்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.