குவாந்தான், மார்ச் 30-
இயங்க வேண்டிய அத்தியாவசியம் இல்லாத நிலையிலும் குவாந்தான் நகரில் இயங்கும் அலியன்ஸ் இரும்பு உருக்கு ஆலை தொடர்ந்து இயங்கி வருவது ஏன் என சோஷலிஸ்ட் மலேசியா எனப்படும் பி.எஸ்.எம் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு விட்டன.
அவசியம் இயங்கியாக வேண்டும் என்ற பட்டியலில் இடம் பெறாத இரும்பு உருக்கு ஆலை தனது தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வேலைக்கு அழைத்து வருகிறது.
வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது எனவும் தொழிலாளர்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
எனினும் போலீஸ் தரப்பிலிருந்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
மலேசியர்களும் சீனப் பிரஜைகளும் அதிகமாக இங்கு பணியாற்றி வருகிறார்கள்.
சமூக விலக்கு இங்கு அமல்படுத்தப்படாமல் உள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவும் சாத்தியம் அதிகம் இருப்பதால் அரசாங்கம் இந்த ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.எஸ்.எம் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.