வுஹான் நகரை விட்டு வெளியேறும் சீனர்கள்

பெய்ஜிங் –

சீனாவின் ஹூபே மாகாணம் வுஹான் நகரில்தான் முதன் முதலில் இந்தக் கொடிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்து தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இந்த வைரஸ் டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டாலும் வைரசின் வீரியத்தை உணர்ந்த சீன அரசு ஜனவரி மாதம்தான் வுஹான் நகருக்கு ஊரடங்கு அமல்படுத்தியது.
வைரஸ் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக அந்நகரம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு சுமார் 1 கோடியே 10 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பிற மாநிலங்களில் இருந்து வுஹான் நகர் உள்ளிட்ட ஹூபே மாநிலத்தின் அனைத்து நகரங்களுக்கும் அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால் வுஹான் நகரில் இருந்து சீனாவின் பிற நகரங்களுக்கு வைரஸ் பரவும் வேகம் வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து, ஹூபே மாநிலம் வுஹான் நகரில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை சீன அரசு தளர்த்தியது. மேலும் ரயில் போக்குவரத்து சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டன.

ரயில் சேவைகள் தொடங்கப்பட்டதையடுத்து கொரோனா அச்சத்தில் இருந்த வுஹான் நகர மக்கள் ஆயிரக்கணக்கானோர் நகரை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தி ஹூபே மாநிலத்தில் இருந்து குறிப்பாக வுஹான் நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சீனாவின் வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here