பெட்டாலிங் ஜெயா,ஏப்.12- மலேசியாவுக்கு வந்த மங்கோலியப் பெண்கள் இருவரை மானபங்கம் செய்ததாக மலேசியா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் மேற்கொள்ளபட்ட சாலைத் தடுப்பு சோதனையின் போது இச்சம்பவம் நிகழ்த்தப்பட்டது என பெட்டாலிங் ஜெயா காவல் துறைத் தலைவர் ஏசிபி நிக் எசானி முகமட் பைசால் தெரிவித்தார்.
தடுப்பு சோதனை நடசடிக்கையின்போது முறையான பயணப் பத்திரம் வைத்திராத நிலையில் இரண்டு பெண்களும் ‘கிராப்’ காரில் பயணம் செய்ததை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் அருகில் இருந்த தங்கு விடுதிக்கு அழைத்துச் சென்று அறையில் வைத்து பூட்டினார்.
பெண்கள் இருவரையும் அவர் வலுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபடுத்தி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்கியுள்ளார்.
தேசிய மொழியோ ஆங்கிலமோ பேச முடியாத பெண்கள் இருவரும் அடுத்த 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டனர் எனவும் 376(3) மானபங்க தடுப்பு குற்றவியல் பிரிவின் கீழ் 30 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி வழக்கை எதிர்நோக்கியுள்ளார் எனவும் நிக் எசானி தெரிவித்தார்.