நியூயார்க்,ஏப்ரல் 23-
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அந்நாட்டில் 1,738 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 46 அயிரத்து 583 ஆக உயர்ந்து உள்ளது. இது மற்ற நாடுகளை விட எண்ணிக்கையில் அதிகம் ஆகும்.
இதேபோன்று 8 லட்சத்து 34 ஆயிரத்து 858 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது ஸ்பெயின் நாட்டை விட 4 மடங்கு அதிகம். ஸ்பெயினில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 389 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை கொண்டுள்ளது. இந்த நாடுகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலி எண்ணிக்கையை கொண்டுள்ளன.
இதேபோன்று உலக அளவில் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.