பூனைகளுக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

நியூயார்க்,ஏப்ரல் 23-

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரு வேறு பகுதிகளில் வசித்து வரும் 2 வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், இவை இரண்டுக்கும் லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. அதனால், குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு அவை வரும் என தெரிவித்துள்ளது.

இவற்றில், முதல் பூனையை வளர்ப்போர் வீட்டில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. வீட்டிற்கு வெளியே கொரோனா வைரஸ் பாதித்த நபர் எவரேனுடனோ ஏற்பட்ட தொடர்பில் இந்த பூனைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2வது பூனையின் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்பின்பே பூனைக்கு, சுவாச பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிய வந்தன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலில் வளர்ப்பு பிராணிகளுக்கு எந்த பங்கும் இல்லை. அதற்கான சான்றுகளும் இல்லை. அதனால் வளர்ப்பு பிராணிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறப்படுவதில் எந்தவித நியாயமும் இல்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிராங்ஸ் விலங்கியல் பூங்காவில் உள்ள புலி ஒன்றுக்கு, இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட இருமலை தொடர்ந்து நடந்த பரிசோதனையில், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று 6 புலிகள் மற்றும் சிங்கங்களுக்கும் அறிகுறிகள் தென்பட்டன. எந்தவித அறிகுறிகளும் தென்படாத ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட விலங்கியல் பணியாளரிடம் இருந்து இந்த விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்க கூடும் என கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here