இன்றைய காலக்கட்டத்தில் மலேசியர்களில் பெரும்பான்மையினர் மனப்பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக மலேசிய நிபுணத்துவ சிந்தனைக்குழு ஒன்று அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. குறிப்பாக மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையில் மக்கள் மனப்பாதிப்புக் குள்ளாகியிருப்பதாக அறிய முடிகிறது என்று அக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வில் மன நலன் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் நோக்கமாக அமைந்திருந்தது. இதற்காக 1,084 மலேசியர்களிடம் பதில்கள் பெறப்பட்டிருக்கின்றன..
இந்த ஆய்வில் 22 விழுக்காட்டினர் கடுமையான, மிகவும் கடுமையான கவலையை அனுபவிப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். 18 முதல் 26 சதவிகிதம் பெண்கள் கடுமையான, மிகவும் கடுமையான மனச்சோர்வுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
அதோடு 35 வயதிற்குட்பட்டவர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் கடுமையான மனச்சோர்வு, பதட்டத்தை அனுபவிப்பதாகக் கூறியிருக்கின்றனர் என்று டாக்டர் இஸ்லான் ஜக்காரியா உதவியுடன் நடைபெற்ற கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையின்போது மலிவு விலையில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மனச்சோர்வு, பதட்டம் , மன அழுத்தத்தின் தீவிர அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகப் புகாரளித்துள்ளனர். குறைந்த விலை வீடுகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன, கட்டமைக்கப்படுகின்றன என்பதை மறுபரிசீலனை செய்வதற்கும், அதில் வாழ்வதன் மனநல பாதிப்புகளைக் கவனத்தில் கொள்வதற்கும் இந்த ஆய்வு உதவுகிறது என்று அவர்கள் ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.
மார்ச் 29 அன்று தொடங்கி மே 12 வரை நீடிக்கும் நான்காம் கட்ட ஆணையில் மலேசியா இப்போது உள்ளது. கோலாலம்பூரில் சிலாங்கூர் மேன்ஷன், மேனாரா சிட்டி ஒன், மலாயன் மேன்ஷன் போன்ற பல பகுதிகள் கட்டுப்பாட்டு ஒழுங்கின் கீழ் வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் இந்தப் பகுதிகளில் பாதிப்புகள் மிகுதியாக இருக்கின்றன. .
இக்குடியிருப்புகளில் வெளிநாட்டினர் நிறைந்திருக்கின்றனர். ஒருவருக்கொருவர் நெருக்கமாக வாழும் சூழல் இங்கு நிலவுகிறது. இங்கு வாழ்கின்றவர்களில் மன இறுக்கம் உருவாகியிருப்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
அடுக்கு வீடுகளின் ஒரு பிரிவில் வசிப்போர் கூட்டத்தின் அளவு மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்கின்றனர். பெரிய குடும்பங்கள் மிகவும் கடுமையான எதிர்மறை உணர்ச்சிகளை அனுபவிக்கின்றனர், நெரிசலான வீடுகளில் வசிப்பவர்கள் மனச்சோர்வு, பதட்டம் மன அழுத்தத்தின் தீவிர அறிகுறிகளைப் பதிவு செய்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இப்போது தனிமைப் படுத்தப்பட்டிருப்பது மனநலனைப் பாதித்திருக்கிறது, தனியாக தங்கியிருப்பதாகப் பதிலளித்தவர்கள் சற்று கடுமையான மனச்சோர்வையும் பதட்டத்தையும் அனுபவிக்கின்றனர் என்பதால், மருத்துவமனைகள், கிளினிக்குகள், பொது ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் ஒரு விரிவான அணுகுமுறையைக் கயாளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.