போலீசார் விசாரணை
கோலாலம்பூர் –
செலாயாங் ஜெயாவில் நீண்ட காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஓர் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் சிறார்கள் சித்திரவதைக்கு ஆளானதாக புகார்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து நேற்று அந்த இல்லத்தின் உரிமையாளர்கள் விசாரணைக் காக அழைக்கப்பட்டனர்.
இந்த இல்லத்தில் தங்கியிருக்கும் 35க்கும் மேற்பட்ட சிறார்கள் தொடர்ந்து சித்திரவதைக்கு ஆளாகிக் கொண்டிருப்பதாக பெண்மணி ஒருவர் நேற்று முன்தினம் இரவு பதிவிட்ட வாட்ஸ்அப் காட்டுத் தீயைப்போல் பரவியது.
செய்தி அறிந்து அன்றிரவு அங்கு முற்றுகையிட்ட அரசு சார்பற்ற இயக்கத்தினர் அந்தச் சிறார்களைக் காப்பாற்றி அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் களமிறங்கினர்.
இந்நிலையில் பத்து நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பி. பிரபாகரன் நேற்று இந்த இல்லத்திற்கு விரைந்து சென்று நிலவரத்தைக் கேட்டறிந்தார்.
இந்த இல்லம் முறையான ஆவணங்கள் இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. சிலாங்கூர் மஇகா தொகுதித் தலைவர் எம்.பி. ராஜா தலைமையில் அங்கு களமிறங்கிய மஇகாவினர் நிலவரத்தைக் கேட்டறிந்தனர்.
இந்நிலையில் அந்த இல்லத்தின் பராமரிப்பாளர்கள் விசாரணைக்காக நேற்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டனர்.
இந்த இல்லத்தில் சிறார்கள் சித்திரவதைக்கு ஆளானார்களா என்பது தொடர்பில் போலீசார் தங்களது புலன் விசாரணையைத் தொடங்கியிருக்கும் வேளையில் பராமரிப்பாளரிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.