குவந்தான், மே.6-
தன்னை ஒரு கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி தம்மைத் தொடர்பு கொண்டதாக 48 வயதான நபர் கூறியதாக பஹாங் வணிக குற்றவியல் புலனாய்வுத் துறைத்தலைவர் சூப்ரிண்டெண்டண்ட் முகமட் வஜீர் முகமட் யூசோப் கூறினார்.
அடையாள அட்டைகள், ஏடிஎம் வங்கி அட்டைகள் ,காசோலை புத்தகங்கள் அடங்கிய சந்தேகத்திற்குரிய பார்சலை சபாவுக்கு அனுப்பியதாக அந்த பெண் கூறினார். அந்த நபர் மறுத்தபோது, அந்தப் பெண் சபாவிலுள்ள ஒரு காவல் நிலையத்தின் காவல்துறை அதிகாரி என்பவரிடம் தொடர்பை மாற்றினார்.
பணமோசடி வழக்கு விசாரணையில் தம் பெயர் இணைக்கப்பட்டுள்ளதாகவும், தணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்நபர் பாதிக்கப்பட்டவரிடம் கூறியிருக்கிறார்.
தாம் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில், பாதிக்கப்பட்டவர் அறிவுறுத்தப் பட்டபடி இரண்டு பரிவர்த்தனைகளில், கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி ‘போலீஸ் இன்ஸ்பெக்டர்’ கொடுத்த கணக்கிற்கு 56,560 வெள்ளிப் பணத்தை மாற்றினார் என்று போலீஸ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.
தணிக்கைக்கு ஒரு வாரம் ஆகும் என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் பணம் அவரிடம் திருப்பித் தரப்படும் என்றும் தொழிலதிபர் கூறியதாக முகமட் வஜீர் கூறினார்.
இருப்பினும், இதுவரை தனக்குப் பணம் கிடைக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொள்ள அவர் எடுத்த முயற்சி பயனற்றதால் பின்னர் போலீஸ் புகார் செய்தார் என்றும் முகமட் கூறினார்.