பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் மூத்த அமைச்சராக இடம்பெற்றிருக்கும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியுடன் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ரகசிய சந்திப்பு நடத்தினார் என்று கூறப்படும் தகவலை சிலாங்கூர் அரசாங்கம் மறுத்துள்ளது.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ஆகியோருடன் சிலாங்கூர் மந்திரி பெசார் ரகசிய சந்திப்பை நடத்தினார் என்று கூறப்படும் வதந்திகளை சிலாங்கூர் மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் போர்ஹான் அமாட் ஷா மறுத்துள்ளார்.
சுகாதார அமைச்சர் டத்தோ அடாம் பாபாவுடன் மட்டுமே அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. ஷா ஆலமில் உள்ள அவரின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் சுகாதாரப் பிரிவுத் தலைவருமான டாக்டர் சித்தி மரியா, சிலாங்கூர் சுகாதார இலாகாவின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கிடையே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மட்டுமே இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினருமான போர்ஹான் அமாட் ஷா கூறினார்.
மாறாக, அஸ்மின் அலியுடன் இந்தச் சந்திப்பு ஒருபோதும் நடைபெறவில்லை என அவர் விளக்கமளித்தார்