இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் சந்தானம், தாரா அலிஷா பெர்ரி முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். பிஸ்கோத்.
எல்லா வேலையும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்த நிலையில் படம் தற்போது வெளிவராத நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வந்து கொறித்துத் தின்ற படமாக இன்னமும் இந்த பண்டம் வெளிவராமலேயே தடைபட்டு நிற்கிறது.
சந்தானம் நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. நகைச்சுவை இழையோடும் கதையைத் தயார் செய்து படங்கள் வெளியிடப்படுவதால் அரங்க வசூலுக்கு ஆபத்து இல்லை என்ற நிலை தொடர்கிறது. எனினும் அண்மையில் வெளியீடு கண்ட டிகால்டி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதாதால் சந்தானம் தரப்பு பிஸ்கோத் படத்தை ரொம்பவும் நம்பியிருக்கிறது.
இதோ அதோ என படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் நேரத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னர்தான் கொரோனா வந்து இந்த பிஸ்கோத்தையும் கடித்துப் பார்த்திருக்கிறது.
இயக்குனர் ஆர்.கண்ணன் தனது “மசாலா பிக்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ரதன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஷண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஆர் கே செல்வா எடிட்டிங் செய்துள்ளார்.
ஏ1 படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்ற மும்பை வரவான தாரா அலிஷா பெர்ரி இப்படத்திலும் சிறப்பாக கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார் என காற்று வாக்காக வந்த செய்தி சொல்கிறது. இரண்டு கதாநாயகிகள் அல்லது கதாநாயகிக்கு இணையான இரண்டு பெண்கள் சந்தானம் படத்தில் நிச்சயமாக இருப்பார்கள்.
பிஸ்கோத்திலும் அப்படி உள்ளதாம். கவர்ச்சிக்கும் பஞ்சமில்லை. ரதனின் இசைமழை வேறு ஜலதோசம் வரும் அளவுக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். கொரோனா காலம் முடிவுக்கு வரும் என்றால் திரையரங்கில் பிஸ்கோத்தும் வந்து விடும் என தயாரிப்பாளர் தரப்பு அடித்துச் சொல்கிறதாம்.
சௌகார் ஜானகி, ஆனந்த் ராஜ், ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவுப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை 2020 பிப்ரவரி 7ல் படக்குழுவினர் இணையதள பக்கம் மூலம் வெளியிட்டுள்ளனர். படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு சந்தானம் ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஏற்படத் தொடங்கி விட்டது.