10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாகத் தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஜூன் 10ஆம் தேதி தேர்வுகள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. எனினும் தேர்வுகள் எப்போது நடக்க வேண்டும் என்பது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது.
அதே வேளையில் தெலங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதத் தேவையில்லை. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என தெலங்கானா அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அறிவிப்பு வெளியானது.
தெலங்கானா எடுத்துள்ள இந்த முடிவு, இந்தியாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
அவரது இந்த முடிவு குறித்து தனது டுவிட்டர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி செய்துள்ள பதிவு அதிமுக வினரிடையே கடுமையான கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே அவர்களின் வலி, வேதனையை உணரமுடியும் என்பதற்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நல்ல உதாரணம். ஆனால் காலைப் பிடிப்பதுதான் கோட்டைக்கான வழி என கூவத்தூர் வழியாக புது பாதை கண்டுப் பிடித்தவர்களுக்கெல்லாம் அவற்றை உணரமுடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.