ஈழப்போரில் 2000 முதல் 3000 ராணுவ வீரர்களை கொன்றேன் என கருணா அம்மான் பேசியது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். அனைத்து கட்சியினரும் கூட்டணி, பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அங்குள்ள அம்பாறையில் சமீபத்தில் நடந்த பிரசாரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரும், அகில இலங்கை திராவுத மகா சபை கட்சி தலைவருமான கருணா அம்மான் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, விடுதலைப் புலிகள் அமைப்பில் நான் இருந்த போது, ஆனையிறவில் 2,000 முதல் 3,000 இலங்கை ராணுவ வீரர்களை கொன்றேன். கிளிநொச்சியிலும் அதிகம் பேரை கொன்றேன் என்றார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் கொன்றதை விட அதிகம் பேரை நான் அதிகமாக கொன்றுள்ளேன் என்றும் அதிரடியாக பேசினார். இது கடும் சர்ச்சையாகி இருக்கிறது.
‘கருணா அம்மான் கொரோனா வைரசை விட ஆபத்தானவர்’ என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. கருணா பேசியது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸ் தலைவர் சந்தனா விக்ரமசிங்கே குற்றவியல் புலனாய்வு துறை விசாரித்து அறிக்கை தர உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் இலங்கை அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் துணைத் தலைவராக இருந்தவர் கருணா. ஆனால், கடந்த 2004ம் ஆண்டில் அவர் அமைப்பிலிருந்து வெளியேறினார்.
அதன்பின் அப்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்சேக்கு நெருக்கமான கருணா, அதன் பலனாக, 2010ல் நாடாளுமன்ற எம்பி.யான அவர், துணை அமைச்சராகவும் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாவின் அகில இலங்கை திராவுத மகா சபை கட்சி, முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் எஸ்எல்பிபி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட இருந்த. ஆனால் கருணாவின் இந்த பேச்சு காரணமாக அவரை கூட்டணியில் இருந்து கழட்விட்டுள்ளார் ராஜபக்சே.