மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல்வேறு குழுக்களாக இணைந்து மெக்சிகோவிலும், எல்லை வழியாக அமெரிக்காவிற்கும் இந்த கடத்தல் குழுக்கள் போதைப்பொருட்களை கடத்தி வருகின்றனர்.
இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தை தடுக்கும் விதமாக அமெரிக்க எல்லையில் மெக்சிகோ ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சில சமயங்களில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் அரங்கேறி வருகிறது. இதில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்துடன் எல்லையை பகிரும் மெக்சிகோவின் தமுயுல்பாஸ் மாகாணம் நூவா லியோன் என்ற பகுதியின் எலையோரம் நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்நாட்டி ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ராணுவ உடை அணிந்து ஆயுதங்களுடன் கார்களில் வந்த போதைப்பொருள் கும்பல் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
போதைபொருள் கும்பலின் தாக்குதலால் சற்று நிலைகுலைந்த ராணுவ வீரர்கள் பதில் அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.
மெக்சிகோ ராணுவ வீரர்களின் பதிலடி தாக்குதலில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 12 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
போதைப்பொருள் கும்பல் பயன்படுத்திய காரும் வீரர்களின் தாக்குதலில் தீக்கிரையானது. போதைப்பொருள் கும்பலிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை ராணுவத்தினர் கைப்பற்றினர்.