மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மிக அவசியாமானது. பல இனம் வாழும் மக்கள் கொண்ட நாட்டில் இன விகிதாச்சாரங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு இருந்தாலும், நாட்டின் ஒட்டுமொத்த மதிப்பில் மலேசியர்கள் என்ற நிலைத்தன்மை மாறுபடக்கூட்டது என்பதுதான் இன நல்லிணக்கத்தை உறுதி செய்யும்.
கடந்த கால கணக்கெடுப்புகளில் இந்தியர்கள் மீதான விகிதாசாரத்தில் உண்மைத்தன்மை திருப்தியாக இல்லை என்ற பரவலான பேச்சு இருந்தது.
உண்மையாக இருந்தால் அப்படிச் செய்யப்படுவதற்கு அரசியலில் ஓரினம் மட்டுமே உயர்த்திருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்க, ஒருதரப்பு மேற்கொண்ட நடவடிக்கை என்றும் அரசல் புரசலான பேச்சுகள் இருக்கின்றன.
எந்தக் குடிமகனும், எந்த இனமாக இருந்தாலும் நாடு, அதன் வளர்ச்சி என்பதுதான் கனவாகவும் பேச்சாகவும் இருக்கும். இதில் இந்தியர்கள் விதி விலக்கல்ல. ஆனால், பலவற்றிலும் இந்தியர்கள் பின்தங்கிய நிலையில்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்ற குறைபாடுகளும் இருக்கின்றன. இது உண்மையா பொய்யா என்பதற்கு ஆதாரம் தேடவேண்டிய அவசியம் இப்போது இல்லை.
புதிய கணக்கெடுப்பில் அப்படியொரு நிலை மறந்தும் உருவாகிவிடக்கூடாது என்பதுதான் இன்றையச் செயலாக இருக்க வேண்டும். அதோடு இன்னொன்றும் இருக்கிறது. அடையாளப் பத்திரம் இல்லாதவர்களில் இந்தியர்களே அதிகம் இருப்பதாகவும் ஒரு தோற்றம் நீண்ட நாட்களாகவே இருக்கிறது. இந்தியர்களுக்கு மட்டுமே இது சாபக்கேடாய் அமைந்துவிட்டது. இதற்கும் வழி காணல் வேண்டும்.
இந்த கணக்கெடுப்பில் இவர்களில் நிலைப்பாடு எதுவாக இருக்கும் என்ற கேள்விக்கு இந்தக்கணக்கெடுப்பு என்ன பதில் கூறப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகமாகவே இருக்கின்றன.
இவர்கள் விடுபட்டால் நாடற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்றுவிடுவார்கள். இந்தக்கணக்கெடுப்பில் இவர்கள் உரிமையற்றவர்கள் என்றும் பதிவாகிவிடும். சலுகைகளுக்கும் இவர்கள் தகுதியற்றவர்களாகிவிடுவர். அப்படியானால், இவர்களின் எதிர்காலம்தான் என்ன?
கடந்த கால அரசியல் விமர்சனஙகளில் மூன்று லட்சம் பேர் ஆவணங்கள் இல்லாதவர்கள் என்ற சர்ச்சையும். பத்தாயிரம் பேர் கூட இல்லை என்ற வாதங்களும் உச்சமாய் இருந்தன.
மூன்று லட்சம் என்பது உண்மை என்று கூறும் தரப்பில் ஆதாரங்களைக் காட்ட முடியவில்லை. இதற்கும் காரணங்கள் உண்டு.
மதம்மாற்றம் இல்லாமல் குழந்தை பெற்றுக்கொண்டு, பதிவு செய்ய முடியாமல் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இந்நாட்டில் பிறந்தவர்களாக இருந்தும். ஆவணங்கள் இல்லாமல் திருமணம் செய்துகொண்டு வம்ச விருத்திகள் செய்தவர்களும் அதிகம். இப்படிப்பட்டவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இதையெல்லாம் கணித்தே மூன்று லட்சம் என்று கூறப்பட்டதாக ஒரு செய்தியும் இருக்கிறது. இது நம்பும்படியாகவும் இருந்தது.
ஆதாரம் என்றால் இவர்களைக் கொண்டுவந்து நிறுத்தவேண்டும். இதற்கு யார் முன்வருவார்கள்?
முடிந்துபோனது முடிந்துபோனதாகவே இருக்கட்டும் என்பது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துவராது. பழைய தவற்றினைச் சரிசெய்துகொண்டால் மட்டுமே கணக்கெடுப்பின் உண்மையான வெளிப்பாடுகள் முறையானது என்றாகும்.
கணக்கெடுப்பில் ஆயிக்கணக்கில் இறன்கியுள்ளார்கள். அவர்கள் துருவிசெயல்படுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. புதிய கணக்கெடுப்பு இந்தியர்களுக்குப் புண்ணியம் சேர்க்குமா என்பது நாட்டின் 15 ஆவது தேர்தலில் புரிந்துவிடும்.
கா. இளமணி