அடையாள அட்டை பிரச்சனையை எதிர்நோக்கும் மூன்று சகோதரிகளை நேற்று காலை 11.00 மணியளவில் அவர்கள் தங்கியிருக்கும் சிரம்பான் ஷக்கினா பராமரிப்பு இல்லத்தில் நேரிடையாக சந்தித்தார் நெகிரி மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன்.
அப்பரமரிப்பு இல்ல உரிமையாளர் திருமதி ஜெனிஃபரை சந்தித்து, அம்மூவரின் முக்கிய ஆவணங்களின் நகல் மற்றும் பெற்றோரின் விபரங்களை சேகரித்துக் கொண்ட அவர், பெற்றோரை பிரிந்து தவிக்கும் அச்சகோதரிகளுக்கு ஆறுதல் கூறி உற்சாகம் தந்தார்.
முதல் கட்டமாக அச்சகோதரிகளின் அம்மா மற்றும் அப்பா எங்கே இருக்கிறார்கள் போன்ற விபரங்கள் ஆராயப்படும். அப்படி அவர்கள் கிடைக்காமல் போனால், தற்போது அவர்களை பராமரித்து வரும் இந்த சமுக இல்லத்தின் மூலமாக, அடையாள அட்டைக்கான விண்ணப்பம் மேற்கொள்ளப்படும்.
இதனிடையே இவ்விவகாரம் குறித்து மக்கள் ஓசை வெளியிட்ட செய்தி மற்றும் பேஷ்புக் காணொளி தகவல் ஊடகத்தின் எதிரொலியாக, அச்சகோதரிகளின் தாயார் லோகேஸ்வரியின் தாயாரின் வீடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இங்கு ரந்தாவில் உள்ள அவ்வீட்டில் தற்போது எவரும் குடியிருக்கவில்லை என்ற தகவலும் கிடைக்கப்பெற்ற வேளையில், தாயாரின் தொடர்ப்பு எண் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் வழி அவரின் தாயாரை தொடர்ப்புக்கொள்ள முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம் அருள்குமார் குறிப்பிட்டார்.
– நாகேந்திரன் வேலாயுதம்