அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வசித்து வரும் ஆஷிஷ் சாஹ்னி என்ற இந்தியர், தனது நிறுவனத்தின் பேரில் எச்1பி விசாக்களுக்கு விண்ணப்பித்திருந்தார். அவர் சமர்ப்பித்த விசா விவரங்களை ஆய்வு செய்தபோது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் போலி என அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் 48 வயதான ஆஷிஷ் சாஹ்னி 4 நிறுவனங்களின் பெயரில் போலியான விவரங்களை சமர்ப்பித்து, மோசடி செய்து எச்1பி விசாக்களை பெற்று தருவது தெரியவந்தது. இதன் மூலம் கடந்த 2011 முதல் 2016 வரையில் 21 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.157 கோடி) அளவுக்கு ஆஷிஷ் சாஹ்னி வருமானம் ஈட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சாஹ்னியை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆஷிஷ் சாஹ்னிக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.