இஸ்லாமாபாத்:
இந்தியா மற்றும் அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். இதுநாள் வரை தாவூத் இப்ராகிமுக்கு தாங்கள் அடைக்கலம் கொடுக்கவில்லை என பாகிஸ்தான் மறுத்து வந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் தாவூத் இப்ராகிம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்களின் 88 தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்து உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் தாவூத் இப்ராகிம் தனது மண்ணில் இருப்பதை பாகிஸ்தான் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. 1993-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராகிம். தாவூத் இப்ராகிமின் தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.