சண்டக்கான் –
சமூகநலத்துறையில் தற்போதைய மாத உதவித் தொகையான 200 வெள்ளிக்கும் 300 வெள்ளிக்கும் இடையிலான நிதியைத் தகுதிபெற்றவர்களுக்கு ஆயிரம் வெள்ளியாக உயர்த்தும் பரிந்துரையைப் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் முன்வைத்துள்ளார்.
வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தப் பரிந்துரையை முன்வைக்கப் போவதாக அவர் குறிப்பிட்டார். என்னுடைய இந்த அறிக்கை மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்டிருக்கும் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் அதுபற்றி எனக்குக் கவலையில்லை. அடிமட்ட மக்களின் வாழ்வாதாரம் எனக்கு மிகமுக்கியம். நீண்ட காலமாக அவர்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார்.
சண்டக்கானில் நேற்று சமூகத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். எனது தலைமைத்துவத்தின் கீழ் செயல்படும் தேசியக் கூட்டணி அரசாங்கம் பி40 தரப்பினர் உள்ளிட்ட மக்களுக்கு உதவுவதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.
நாடு சுதந்திரம் பெற்று நீண்ட காலம் ஆகிவிட்டபோதிலும் இந்தத் தரப்பினரின் நிலை குறித்து பிரதமர் வேதனை தெரிவித்தார். இவர்களின் வருமானம் மிகக் குறைவு. வாழ்வதற்கும் மிகவும் சிரமப்படுகின்றனர் என்றார் பிரதமர்.