அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ‘விஸ்கான்சின் மாகாணத்தில் சமீபத்தில் நடந்த வன்முறைகளுக்கு, அதிபர் டொனால்டு டிரம்ப் காரணம்’ என, குடியரசு கட்சி வேட்பாளர், ஜோ பிடன் காரசார பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில், அதிபர், டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
கடந்த சில மாதங்களாக, ‘கொரோனா வைரஸ் பரவலை டிரம்ப் நிர்வாகம் சரியாக கையாளவில்லை’ என, ஜோ பிடன் பிரசாரம் செய்து வந்தார்.இந்நிலையில், விஸ்கான்சின் மாகாணத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கருப்பின இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி வருகிறார். அதையடுத்து, விஸ்கான்சின் மாகாணத்தில் வன்முறை வெடித்துள்ளது.இந்த மாகாண நிர்வாகம், ஜனநாயகக் கட்சியின் கீழ் உள்ளது. அதையடுத்து, ஜனநாயகக் கட்சிக்கு எதிராக, டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்நிலையில், பிட்ஸ்பர்க்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜோ பிடன், டிரம்புக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.’வன்முறைகளுக்கு டிரம்பே காரணம். அவர்தான், இதை துாண்டிவிட்டுள்ளார்’ என, பிடன் குற்றஞ்சாட்டி, கடுமையாக பேசினார்.
கட்சியின் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டபோது அளித்த ஏற்புரையின்போது, டிரம்ப் குறித்து அவர் பேசவேயில்லை. ஆனால், பிட்ஸ்பர்க்கில் நடந்த கூட்டத்தில், 32 முறை டிரம்பின் பெயரை குறிப்பிட்டார். ‘கொரோனாவைத் தவிர வேறு எதைப் பற்றி, ஜனநாயகக் கட்சி பிரசாரம் செய்தாலும், அதனால் பாதிப்பு ஏற்படாது’ என்பது, டிரம்ப் பிரசார குழுவின் கணக்கு. அதற்கு ஏற்றார்போல், தற்போது, பிடனின் பிரசார பொருள் மாறி உள்ளது. இது டிரம்ப் பிரசார குழுவுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.