இந்தியப்பிரமுகர்களை உளவு பார்க்கும் சீனா

இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களின் தனிப்பட்ட விவரங்களையும், அமைப்புகளையும் சீன தொழில்நுட்ப நிறுவனம் கண்காணித்து வருவதாக பத்திரிகையில் வெளியான செய்தி குறித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர்கள், அண்டை நாட்டின் டிஜிட்டல் தாக்குதலை சமாளிக்க அசைக்க முடியாத நெருப்புச்சுவரை கட்டி எழுப்ப வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டனர்.

மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கே.சி. வேணுகோபால், ராஜீவ் சாதவ் ஆகியோர் பூஜ்ஜிய நேரத்தின்போது இந்த விவகாரத்தை எழுப்பினர்., மாநிலங்களவைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளுமாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும், “இது முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அமைச்சருக்குத் தெரிவித்து, உண்மைத் தன்மையைக் கண்டறிவதுடன், இதற்கு என்ன செய்யலாம் என்பதைப் பாருங்கள் என அவர்அறிவுறுத்தினார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதீர் ரஞ்சன் செளத்ரி கூறுகையில், கரோனா தீநுண்மி பரவுதல், லடாக்கில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல், தற்போது டிஜிட்டல் தாக்குதல்” ஆகியவற்றின் பின்னணியில் சீனா உள்ளது.

நாம் அந்நாட்டின் பிடியில் இருக்கிறோம் என்பது குறித்து அரசு விழித்துக்கொள்ளவில்லையா? நமது தேசிய பாதுகாப்பு சிதைக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

மேலும், சீனாவின் “புதிய அச்சுறுத்தலை எதிர்ப்பதற்கு அசைக்க முடியாத நெருப்புச்சுவர் ஒன்றை உருவாக்க வேண்டும் என தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை கேட்டுக்கொண்டார்.

ஷென்யுஸனை தளமாகக் கொண்டு இயங்கும் இந்த தொழில்நுட்ப நிறுவனம், சீன அரசுடனும், அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியுடனும் தொடர்புடையது. அந்நிறுவனம், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களையும், அமைப்புகளையும் அதன் வெளிநாட்டு தரவு இலக்குகளின் மூலம் உலகளாவிய தரவு தளத்திலிருந்து கண்காணித்து வருவதாக ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

அதில், இந்திய குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர், மாநில முதல்வர்கள், எம்.பி.க்கள், ராணுவத் தளபதி, தொழிலதிபர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களும் அடங்குவர் என்பது மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

மேலும், அந்த நிறுவனம் முக்கிய பதவிகளில் உள்ள அதிகாரிகள், நீதிபதிகள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், மதப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் புள்ளிவிவரங்களையும் சேகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here