கேங் வில்லியம் என்ற கார் திருட்டு கும்பலை கோலாலம்பூர் போலீசார் வளைத்து பிடித்துள்ளனர். கடந்த 24.8.2020 சாலா செலத்தான், தாமான் எமாஸ் என்ற பகுதியில் 41 வயது சீன ஆடவரின் டெயோட்டா வெல்பெயர் கார் காணாமல் போனதாகவும் அதனால் தனக்கு 220,000 வெள்ளி நஷ்டம் ஏற்பட்டதாக போலீஸ் புகார் செய்ததை தொடர்ந்து அவ்வழக்கை செக்ஷன் 379A கீழ் பதிவு செய்து விசாரிப்பதாக கூறினர்.
கோலாலம்பூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் முதலில் இரு உள்நாட்டு சீன ஆடவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேலும் 6 சீன ஆடவர்கள், 1 சீனப் பெண் மற்றும் 1 இந்திய முஸ்லீம் ஆடவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்ட 10 பேரின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கைதானவர்கள் 17 வயது முதல் 66 வயதிற்கு உட்பட்டவர்களாவர்.
அவர்களிடம் இருந்து 6 லட்சம் மதிப்பிலான கார்களை போலீசார் கைப்பற்றியதோடு, நீலாய் வட்டாரத்தில் இயங்கி வந்த ஒரு இடத்தை சோதனையிட்டதில் திருடிய காரை வெட்ட பயன்படுத்தும் இயந்திரம் உள்ளிட்ட 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் கைப்பற்றியதோடு கடந்த 6.8.2020 காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டிருந்த ஹோண்டா சிவிக் காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் அதே கும்பல் வழங்கிய தகவவில் செந்தூல் வட்டாரத்தில் இருந்து ஜேம்மர் என்று அழைக்கப்படும் காரை திருட பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்ட 150,000 வெள்ளி மதிப்பிலானப் பொருட்களை கைப்பற்றி இருப்பதாக கோலாலம்பூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ சைபூல் அஸ்லி பின் ஹாஜி கமாருடின் தெரிவித்தார்.
இதன் வழி கோலாலம்பூரில் 7 புகார்கள், சிலாங்கூரில் 7 புகார்கள், பேரா மற்றும் மலாக்கா மாநிலத்தில் தலா 3 புகார்கள் என மொத்தம் 20 புகார்களுக்கு தீர்வு கண்டிருப்பதாக அவர் கூறினார்.
குற்றச் செயல் குறித்து விவரம் அறிந்த பொதுமக்கள் கோலாலம்பூர் குற்ற புலனாய்வு பிரிவு எண்ணான 03-21460670 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு டத்தோ சைபுல் கேட்டுக் கொண்டார்.
படங்கள் : எல்.கே.ராஜ்