சிறப்பாக பணி செய்யும் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக புதுக்கோட்டை நகராட்சியில் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தூய்மையே சேவை என்ற நோக்கில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர் விழாவில் பேசிய நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்சா, தூய்மைப் பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர் என்றும், அதே வேளையில் அவர்கள் கவனமாகவும் பணிபுரிய வேண்டும் . கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அவர் இவ்வாறு கூறினார்.
இனி வரக்கூடிய காலக்கட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். நகராட்சி ஆணையரின் இந்த அறிவிப்பு தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.