விளக்கில் இருந்து தீபத்திரியை மாற்றும் போது இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்

நம்முடைய வீட்டு பூஜை அறையில் வாரம் ஒருமுறையோ அல்லது இரண்டு நாட்களோ அல்லது தினந்தோறும் தீபமேற்றி வழிபடுபவர்களில் சிலர் அறியாமல் செய்யும் தவறினால் வீட்டிற்கு வரும் மகாலட்சுமி வாசல்படியை தாண்டி வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கமாட்டாள். அதோடு துஷ்ட சக்திகளும் வீட்டிற்குள் வருவதோடு, குடும்பத்திற்குள் தேவையில்லா பிரச்சனைகளை உண்டாக்கி விடும்.

நம்முடைய மூதாதையர்கள் பழக்கப்படுத்தி சொல்லிவிட்டுச்சென்ற அனைத்து பழக்கங்களுக்கும் பின்னால் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல விஷயங்கள் மறைந்திருக்கும். இதை சாதாரணமாக பார்த்தால் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. அதை முறையாக செய்து பழக்கப்படுத்திக்கொண்டு தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே அந்த நல்ல விஷயங்கள் நமக்கு கிடைக்கும். அப்படி இல்லாமல்,முன்னோர்கள் விட்டுச்சென்ற பழக்க வழக்கங்களை மதிக்காமல், அதெல்லாம் சும்மா, வெட்டி வேலை என்று விதாண்டாவாதம் பேசுபவர்களைத்

தான் துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி துவட்டி எடுக்கும்.

அதுபோலவே, நம்முடைய ஜாதகத்தில் என்ன தான் கிரகங்கள் உச்சம் பெற்று அமர்ந்திருந்தாலும், அதனால் நமக்கு நல்லது நடக்கவேண்டுமென்றால் நாமும் நம்முடைய வீட்டில் சில நல்ல பழக்க வழக்கங்களை தொடர்ந்து செய்து வரவேண்டும். அதில் ஒன்று தான் பூஜை அறையில் தீபமேற்றும் முறையும்.

இந்துக்களில் பெரும்பாலானவர்கள் செவ்வாய், வெள்ளி என வாரம் இரண்டு தடவையும், சிலர் வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய் என வாரம் ஒரு முறையும் தீபமேற்றி வழிபடுவதுண்டு. தீபமேற்றி வழிபடுபவர்கள், சில மணி நேரம் கழித்து திரி கருகும் முன்போ அல்லது எண்ணெய் தீர்ந்து விடும்

முன்போ மலர்களால் தீபத்தை அனைத்து விடுவதுண்டு. திரி கருகிவிட்டாலோ அல்லது திரியின் நிறம் பச்சை நிறமாக மாறிவிட்டாலோ வேறு திரியைக் கொண்டு தான் தீபமேற்ற வேண்டும்.

தீபத் திரியானது பச்சை நிறமாக மாறிவிட்டால் வீட்டிற்கு நல்லதல்ல என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். கூடவே பணத் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்திடும். எனவே வாரம் ஒரு முறை விளக்கேற்றுபவர்கள் தீபமேற்றும் முன்பாக விளக்கை நன்கு தேய்த்துவிட்டு அதன்பிறகு விளக்கேற்றலாம்.

தீபத்திரியை மாற்றும் போது பழைய திரியை எக்காரணம் கொண்டும் குப்பையில் போடக்கூடாது. அப்படி செய்தால் அதோடு மஹாலட்சுமியும் வீட்டைவிட்டு சென்றுவிடுவார். எனவே இதைமட்டும் செய்துவிடாதீர்கள். தீபத்திரிகளை மாற்றும்போது அந்த திரிகளை சேர்த்து வைக்கவேண்டும்.

சிறிதளவு திரிகள் சேர்ந்த பின்பு, நமக்கு சவுகரியமான ஒரு நல்ல நாளில் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு வீட்டிலுள்ள அனைவரையும் ஒன்றாக கிழக்கு பார்த்து உட்கார்த்தி வைத்து, சேர்த்து வைத்துள்ள திரிகளை தூபக்காலில் போட்டு அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மூன்று தடவையும் இடமிருந்து வலமாக மூன்று தடவையும் திருஷ்டி கழிக்க வேண்டும்.

திருஷ்டி கழித்த பின்பு அந்த திரிகளை நம்முடைய தலை வாசலின் முன்பாக வைத்து கொளுத்தி விடவேண்டும். திரிகள் முழுவதும் எரிந்து சாம்பலாகிவிடும். அத்தோடு நம்மைப் பீடித்திருந்த துஷ்ட சக்திகளும் எதிர்மறை ஆற்றலும் அந்த தீயில் எரிந்து காணாமல் போய்விடும்.

அந்த சாம்பாலான திரிகளை நம்முடைய காலடி படாத இடத்தில் போட்டுவிடவேண்டும். அப்படி இல்லாவிட்டால் நம்முடைய வீட்டு சமையலறை சிங்க்கிள் போட்டு தண்ணீர் விட்டு விடவேண்டும். அப்படி செய்து வந்தால் நம்முடைய கஷ்டம் தொலைந்து வீட்டிலும் நேர்மறை ஆற்றலும், நல்லெண்ணமும் அதிகரிக்கும். நாம் நினைக்கும் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here