‘ரயில் பயணியருக்கு தரமான உணவு பண்டங்களே விற்கப்படுகின்றன’ என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் – காரைக்குடி இடையே இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 5௦ கிராம் எடையுள்ள பொங்கல் 8௦ ரூபாய்க்கு விற்கப்படுதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அதற்கு தெற்கு ரயில்வே அளித்துள்ள விளக்கம்:ரயில் பயணியருக்கு கொரோனா பரவாமல் இருக்க தேவையான பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதார அபாயங்களை குறைக்க ரயில்களில் சமைத்த உணவு வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பயணத்தின் போது பயணியரின் குறைந்தபட்ச தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி.யின் நடமாடும் உணவகத்தில் பிரபல நிறுவனங்களின் சிற்றுண்டிகள் பார்சலில் விற்கப் படுகின்றன.
டப்பாக்களில் அடைத்து 61 கிராம் எடையுடைய பதப்படுத்தப்பட்ட பொங்கல், சாம்பார் சாதம் விற்கப்படுகிறது. எப்படி சாப்பிட வேண்டும் எனவும் டப்பாக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. டப்பாவின் மூடியை திறந்து சாதத்தில் தண்ணீர் அல்லது சுடுதண்ணீர் ஊற்றினால் 8 நிமிடங்களுக்கு பின் 220 முதல் 230 கிராம் வரை எடையுள்ள சாதம் கிடைக்கும். பிரபல நிறுவனங்களின் தரமான உணவுகளே விற்கப்படுகின்றன. இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.