இனி சிங்கிள் பேரண்ட் குழந்தைகளுக்கு தனி பிறப்பு சான்றிதழ்

திருச்சியை சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என கருதி விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு செய்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழுக்காக மனுவில் குழந்தையுடைய தந்தை பெயர் என்னும் இடத்தை பூர்த்தி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.எனவே மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்ட போது விந்தணு கொடையளித்தவரின் பெயரை இணைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அதில், தான் ஒற்றை பெற்றோராக இருக்கும் பட்சத்தில் தாயின் பெயர் மட்டுமே பிறப்பு சான்றிதழில் பதிவு செய்தால் போதுமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இதை விசாரித்த மாண்புமிகு நீதிபதி ஐயா M.S.ரமேஷ், அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்.

அந்த தீர்ப்பில், தந்தையை இழந்த குழந்தை அல்லது தந்தையை பிரிந்து தாயின் பாதுகாப்பில் மட்டும் வளரும் குழந்தை, தந்தையுடைய வருமானம் இன்றி தாயின் வருமானத்தில் மட்டுமே வளரும் வாழும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தாலே போதும். தந்தையுடைய பெயர் அல்லது முதலெழுத்து (இனிஷியல்) சேர்க்க வேண்டிய கட்டாயமில்லை எனவும், பள்ளிச்சேர்க்கை மற்றும் சொத்து பதிவு ஆகியவற்றிற்கும் இது பொருந்தும் என அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.

நமது இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் திருமணமாகாமலே அல்லது திருமணமாகியும் கணவனால் புறக்கணிக்கப்பட்டும் கற்பவதிகளாகியும் கயவர்களால் கைவிடப்படுவதும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனிஷியல் மற்றும் பள்ளி சேர்க்கையின் போது தந்தையின் பெயர் கேட்டு அவஸ்தைப் படுத்தியதற்கும் ஒரு விடிவுகாலமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

இனி தந்தையின் இனிஷியலை போல தாயின் இனிஷியலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற சீர்திருத்தத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என பெருமை கொள்வோம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here