‘இந்தியாவில் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள்’ என, கூகுள், பேடிஎம் நிறுவனங்களிடம், பார்லி குழு கேள்வி எழுப்பியுள்ளது.தனி நபர் தகவல் பாதுகாப்பு மசோதா தொடர்பாக, வலைதள நிறுவனங்களின் உயரதிகாரிகளிடம், பா.ஜ., – எம்.பி., மீனாட்சி லேகி தலைமையிலான பார்லி குழு விசாரித்து வருகிறது. அதன்படி, ‘பேஸ்புக், டுவிட்டர், அமேசான்’ நிறுவன உயரதிகாரிகள், பார்லி., குழு முன், ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
நேற்று, கூகுள், பேடிஎம்., நிறுவனங்களின் உயரதிகாரிகள் நேரில் ஆஜராகினர்.இது குறித்து, பார்லி., நிலைக்குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: நிலைக் குழு, இந்தியாவில் கூகுள் நிறுவனம், அதன் கூகுள் பே, யூடியூப் உள்ளிட்ட பிரிவுகள் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறது, எவ்வளவு வரி செலுத்துகிறது என, கேட்கப்பட்டது. தனி நபர் தகவல்கள், எங்கு, எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி சேமிக்கப்படுகின்றன என, தெரிவிக்குமாறு கோரப்பட்டது.
கூகுள், பேடிஎம்., நிறுவனங்களில், சீன நிறுவனங்கள் செய்துள்ள முதலீட்டு விபரங்கள் கோரப்பட்டன. அத்துடன், சீன நிறுவனங்களுடன் உள்ள வர்த்தக தொடர்பு குறித்தும் விரிவாக கூறுமாறு வலியுறுத்தப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.