நேட்சர் எனும் இணையதள ஏட்டில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில், மலேசியாவில் மாநில சுகாதாரப் பாதுகாப்பு இல்லை என்பது குறித்த செய்தி தவறானதாகும். மேலும் மலேசிய தேசிய சுகாதார முறையை முற்றிலும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மலேசியர் என்று கூறிக்கொண்ட, லண்டன் நகரைத் தளமாகக் கொண்ட மூலக்கூறு இம்மோனாலாஜிஸ்ட் ஆட்ரே தே என்பவர் மேற்கோள் காட்டிய கட்டுரைக்கு அவர் பதிலளிதிருந்தார்.
மலேசிய அரசாங்கம் அதன் விரிவான பொது மருத்துவமனைகள் கிளினிக்குகள் மூலம் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் அதிக மானியத்துடன் கூடிய சுகாதார சேவைகளை வழங்கியுள்ளது என்றார் அவர்.
சுகாதார மேம்பாடு, நோய் தடுப்பு, நோய் தீர்க்கும் முறை, புனர்வாழ்வு, பராமரிப்பு உள்ளிட்ட விரிவான சேவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மலேசியாவில் வசிப்பவர்கள் அனைவரும் இந்த சேவைகளைக் குறைந்த கட்டணத்துடன் அணுக முடியும்,. அதே நேரத்தில் ஏழை, ஊனமுற்றோர் முதியவர்கள் போன்ற பின்தங்கிய மக்களுக்கான சேவைகள் இலவசமாகவும் வழங்கப்படுகின்றன.
இது ஒரு வலுவான பாதுகாப்பு வலையை உருவாக்குகிறது. பணம் செலுத்தும் திறனைப் பொருட்படுத்தாமல், தேவையான சுகாதாரத்துக்கான அணுகல் யாருக்கும் மறுக்கப்படுவதில்லை என்பதி உறுதிசெய்கிறது என்று அறிக்கையில் தெரிவித்தார்.
அதிக மானியத்துடன் கூடிய பொதுசுகாதார சேவைகளுடன், அரசாங்கம் குறைந்த பயனர் கட்டணங்களை மட்டுமே வசூலிக்கிறது. எடுத்துக்காட்டாக, 2018 ஆம் ஆண்டில், சுகாதார அமைச்சின் இயக்க வரவுசெலவுத் திட்டத்தில் பயனர் கட்டணம் 1.5 சதவிகிதம் மட்டுமே இருந்தது, இது சுகாதார சேவையை அணுகுவதற்கான நிதிச் சுமையைத் தணிப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மேலும் விளக்குகிறது.
பல விஷயங்களில், மலேசிய பொது சுகாதார சேவை அனைவருக்கும் நடைமுறையில் இலவசமாக வழங்கப்படுவது ஒட்டுமொத்த தேசிய சுகாதார சேவைக்கு ஒத்ததாகும் என்று அவர் கூறினார்.










