‘ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் டிக்கெட் எடுத்திருந்த போதிலும் காத்திருப்பு பட்டியலில் இருந்ததால், ரயிலில் பயணிக்க முடியவில்லை,’ என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 2019-2020ம் ஆண்டில் மொத்தம் 1.25 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்வதற்கு திட்டமிட்டு இருந்தனர். ஆனால், காத்திருப்பு பட்டியலில் இருந்ததால் இவர்களால் பயணம் செய்ய முடியவில்லை. பின்னர், இந்த டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு விட்டது. பயணிகள் காத்திருப்பு பட்டியல் மற்றும் டிக்கெட்டுக்கள் தானாக ரத்து செய்வது உள்ளிட்டவை ரயில்வே துறையில் நீண்ட காலமாக பிரச்னையாக இருந்து வருகிறது. பயணிகள் பெயர் பதிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் ஏறக்குறைய 5 கோடி பயணிகளின் பெயர், காத்திருப்பு பட்டியலில் இருந்ததால் தானாகவே ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.