பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப் , ஹரியானா விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது விவசாயிகளின் போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது.
டெல்லியின் எல்லை பகுதிகளில் உள்ள சாலை , நெடுஞ்சாலைகளில் அமர்ந்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும் அதனை விவசாயிகள் ஏற்க மறுத்து விட்டனர்.
வேளாண் சட்டங்களில் எங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும், அந்த சட்டங்களில் அரசு கொள்முதலுக்கு உத்ரவாதம் வேண்டும் என்பது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாகும்.
இந்த சூழ்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தனியார் டாக்சி யூனியன்கள் களத்தில் குதித்துள்ளன. டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை 2 நாட்களில் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றால், டெல்லி என்.சி.ஆரில் தனியார் கேப்ஸ், டாக்சி, ஆட்டோ, டிரக்குகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று டாக்சி யூனியன்கள் எச்சரிக்கை செய்துள்ளன.