மாஸ்கோ:
பசிபிக் கடல் தெற்கு பகுதியில் பல்வேறு தீவுக் கூட்டங்கள் உள்ளன. அதில் ஒரு தீவுக்கூட்டம் ரஷியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான உரிமைச் சண்டையை உருவாக்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் எல்லையில் அமைந்துள்ள அந்த தீவுக்கூட்டத்தினை ஜப்பான் தெற்கு எல்லையென கூறிவருகிறது. அதே தீவுக்கூட்டங்களுக்கு ரஷியாவும் தங்கள் தீவுகள் என கூறுகிறது.
இந்த தீவுக்கூட்டத்தை ஜப்பானிடம் இருந்து இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ரஷியா கைப்பற்றியது. அன்றில் இருந்து இந்த தீவுகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜப்பான் கூறிவருகிறது.
ஜப்பான் நாட்டின் முந்தைய பிரதமர் அபே தனது ஆட்சிக்காலத்தின்போது இந்த தீவுக்கூட்ட உரிமை பிரச்சினை தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்து வந்தது.
இதற்கிடையில், ஜப்பான் தற்போதைய பிரதமரான யோஷிஹைட்சுகாவும் இந்த தீவுக்கூட்டம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினிடம் அமைதிப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய குரில் தீவுகள் அல்லது தெற்கு எல்லைத் தீவுக்கூட்டங்களில் ரஷியா அதீநவீன ஆயுதங்களை குவித்துள்ளது.
அதிநவீன ஏவுகணை தடுப்பு அமைப்பான எஸ் 300 வி4 குரில் தீவுகளில் நிறுவப்பட்டுள்ளதாக ரஷிய ராணுவம் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், தோர் எம்2 ரக குறைவான தொலைவு பாயும் ஏவுகணைகளும் அந்தத் தீவுகளில் நிறுவப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தால் ரஷியா-ஜப்பான் இடையே பதற்றம் நீடிக்கிறது.
கமெண்ட்: பிறருக்குச் சொந்தமான மண்ணைப் பிடுங்குவது அரச லட்சணம் அல்ல! இப்படித்தான் மகான்கள் கூறுகின்றனர்.