வாஷிங்டன்-
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. அந்நாட்டில் இதுவரை 1 கோடியே 72 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு கடந்த 14- ஆம் தேதி முதல் அமெரிக்காவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பயன்பாட்டிற்கு வந்துள்ள தடுப்பூசி கொரோனா தடுப்பு பணியில் உள்ள முன்கள ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள அந்நாட்டு மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என சில ஆய்வு முடிவுகள் வெளியானது.
கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் அதன் மீதான நம்பிக்கையின்மையே இதற்கு காரணம் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், அமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையிலும், தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்பதை நிரூபிக்கும் வகையிலும் அந்நாட்டு துணை அதிபரான மைக் பென்ஸ் நாளை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளார் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.
மைக் பென்ஸ் உடன் இணைந்து அவரது மனைவி கரீன் பென்சும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளார்.
துணை அதிபர் செய்தியாளர்கள் முன்னிலையில் பொதுவெளியில் வைத்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளார் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.
இதனால், கொரோனா தடுப்பூசி மீதான பொதுமக்களின் அச்சம் குறைந்து மக்கள் அதிக அளவில் தடுப்புசி போடும் நடவடிக்கையில் ஆர்வமுடன் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.