அங்காரா-
தரையில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை பெற்றது ரஷியாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதம்.
இந்த ஆயுதத்தை ரஷியாவிடம் இருந்து வாங்க அமெரிக்கா தலைமையிலான நோட்டோ அமைப்பின் உறுப்பு நாடான துருக்கி ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.
ஆனால், அமெரிக்காவின் கண்டனத்தையும் மீறி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷியாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை துருக்கி வாங்கியது. இந்த ஆயுதங்கள் தற்போது துருக்கி எல்லையில் முழுவதும் நிறுவப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்நிலையில், நோட்டோ உறுப்பினராக இருந்துகொண்டு ரஷியாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு ஆயுதம் வாங்கியதால் கடும் கோபமடைந்த அமெரிக்கா, துருக்கி பாதுகாப்புத்துறை, தொழில் இயக்குநகரம் அதன் தலைவர் இஸ்மாயில் டிமீர், 3 நிர்வாகிகள் மீது பொருளாதாரத்தடை விதித்தது.
துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள இந்த பொருளாதாரத் தடையால் இரு நாட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஐரோப்பிய நாடுகளும் துருக்கி மீது பொருளாதாரத்தடை விதிக்க திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், தன் நாடு மீது அமெரிக்கா போட்டுள்ள பொருளாதார தடைக்கு துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.