சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 3 ஆயிரத்து 280 பேரும், பிரேசிலில் 968 பேரும், மெக்சிகோவில் 801 பேரும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 387 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, 7 கோடியே 44 லட்சத்து 84 ஆயிரத்து 526 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 2 கோடியே 5 லட்சத்து 14 ஆயிரத்து 807 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 236 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 5 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16 லட்சத்து 54 ஆயிரத்து 87 பேர் உயிரிழந்துள்ளனர்.