சபரிமலை :
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 30-ந் தேதி திறக்கப்பட்டது. 31 ஆம் தேதி முதல், வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுடன், படி பூஜை நடைபெற்று வருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 31-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை முன்பதிவு செய்தவர்களுக்கான தரிசன அனுமதி. இன்று (வியாழக்கிழமை) முடிவடைகிறது.
இந்த நிலையில் 8-ஆம்தேதி (நாளை) முதல் 18-ஆம் தேதி வரை சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. இது தொடர்பாக கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:-
சபரிமலையில் மகரவிளக்கு பூஜையையொட்டி, அய்யப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. 18-ஆம் தேதி வரையிலான தரிசனத்திற்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.