ரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ராமசாமி சுப்ரமணிய மனோகர், 1925-ம் ஆண்டு ஜுன் 29- ஆம் திகதி தமிழ்நாடு, நாமக்கலில் சுப்ரமணிய ஐயர் , ராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன். இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராவார்.
வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன, இரு வல்லவர்கள், ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன், பல்லாண்டு வாழ்க, அடிமைப் பெண், காவல்காரன், இதயக்கனி, அதிசய பெண் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். அவற்றுள் இலங்கேசுவரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரசித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் மற்றும் திருநாவுக்கரசர் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இவர் 2006- ஆம் ஆண்டு ஜனவரி 10- ஆம் தேதி மரணமடைந்தார்.