பாக்கிஸ்தான் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியான பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் நயீம் புகாரி. பிரதமர் இம்ரான்கானுக்கு நெருக்கமான இவருக்கு 65 வயதுக்கு மேல் ஆகிறது.
எனவே 65 வயதுக்கு மேற்பட்டவர்களை பாக்கிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனத் தலைவராக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள தடையை சுட்டிக்காட்டி புகாரிக்கு எதிராக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இதை விசாரித்த நீதிமன்றம் புகாரி நியமனத்துக்கு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து புகாரியை பதவிநீக்கம் செய்து மந்திரிசபை நடவடிக்கை எடுத்து உள்ளது. புகாரிக்கு பதிலாக அமர் மன்சூரை புதிய தலைவராக நியமனம் செய்துள்ளது.
பாக்கிஸ்தான் தொலைக்காட்சி தலைமை பொறுப்பில் இருந்து நயீம் புகாரி நீக்கப்பட்ட சம்பவம் இம்ரான்கானுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.