ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது.
இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசி சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் தீராப்பகை உருவானது.
இந்த நிலையில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
அயத்துல்லா அலி காமெனியின் அதிகாரபூர்வ வலைதளத்தில், டிரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருக்கையில் அவரது தலைக்கு மேல் போர் விமானம் பறப்பது போன்ற ஒரு புகைப்படம் பகிரப்பட்டிருக்கிறது. அந்த பதிவில் பழிவாங்கப்படுவது நிச்சயம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேபோல் அயத்துல்லா அலி காமெனியுடன் தொடர்புடைய டுவிட்டர் கணக்கிலும் இந்த புகைப்படம் பகிரப்பட்டது.
அந்தப் பதிவில் சுலைமானியைக் கொன்றவர். இவர் தான் சுலைமானியை தாக்க உத்தரவிட்டார். டிரம்ப் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்’’ என பாரசீக மொழியில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது. அதேசமயம் இந்த டுவிட்டர் கணக்கு அயத்துல்லா அலி காமெனியுடையது இல்லை என்றும் போலியான டுவிட்டர் கணக்கு என்றும் டுவிட்டர் மூலம் விளக்கமளித்துள்ளது.