டில்லிராணி முத்து
சித்தியவான் ,பிப். 2-
இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் பதிவு சரிந்து வரும் வேளையில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் மஞ்ஜோங் பாரதி முன்னேற்ற இயக்கம், நட்பே துணை கூட்டுறவு கழகம் மற்றும் ஊத்தான் மெலிந்தாங் குழல் வலையொளி தளம் ஆகிய மூன்று அரசு சார்பற்ற இயக்கங்கள் தன்னார்வ முறையில் பேராக் மாநிலம் முழுவதும் சுமார் 64 பதாகைகளை ஆங்காங்கே பொருத்தியுள்ளது.
மஞ்சோங் பாரதி முன்னேற்ற இயக்கத் தலைவர் இரா.விஜயன் கூறுகையில் தமிழ்ப்பள்ளியே எனது தேர்வு என்ற முழக்கம் மலேசிய முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில் அதனை ஊக்குவிக்கும் வகையில் பதாகைகளை மக்களின் பார்வைக்குக் கொண்டுசென்றால் இன்னும் பலனாகவும் பலமாகவும் அமையும்
என்று எண்ணுவதகாகக் கூறினார்.
மேலும் நட்பே துணை கூட்டுறவு கழகத் தலைவர் க. ஸ்ரீ ஆனந்தன் மூன்று துருவங்களான பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பெற்றோர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் இந்தப்
பிரச்சனைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு காணலாம் என
எடுத்துரைத்தார்.
தமிழ்ப்பள்ளியைப் புறக்கணிப்பதற்கு ஆயிரம் காரணங்களை முன் வைக்கலாம். ஆனால் தமிழ்ப்பள்ளியை ஏற்றுக்கொள்வதற்கு ஒரே காரணம், தமிழ் மொழி என் தாய்மொழி என்றார்.
மஞ்சோங் பாரதி முன்னேற்ற இயக்கத் தலைவர் விஜயன் என்னை
அணுகியபோது, அவரிடம் ஒரே ஒரு வார்த்தை மட்டுமே கூறினேன், அதாவது தமிழக்கும் என்னைச் செதுக்கிய தமிழ்ப்பள்ளிக்கும் என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
ஆதலால் பாகான் டத்தோ வட்டார முழுவதும் பதாகைகளை நானே பொருத்துகின்றேன் எனக் கூறியதாகச் சொன்னார் குழல் வலையொளித்தள இயக்குநரும் ஆசிரியருமான ஆ. சிவக்குமார். என்னுடன் சேர்ந்து ஆசிரியர் தனேசு பாலகிருட்டிணன் தெலுக் இந்தான் வட்டாரம் முழுவதும் பதாகைகளை பொருத்திக் கொடுத்தார் என்றார் அவர்.
தமிழ்மொழி படித்தாலும் சரி, தமிழ்மொழி பேசினாலும் சரி, அனைவருடைய வாழ்வில் மறுமலர்ச்சியும், தனிவளர்ச்சியும்
கட்டாயம் கிடைத்தே தீரும் என்று சம்பந்தப்பட்ட அனைவரும் கூறினர்.