வாஷிங்டன்:
இந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லைப்பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பேரிகார்டுகளை கொண்டு மிகப்பெரிய அரண்களை ஏற்படுத்தியுள்ளனர். அதோடு அல்லாமல் இண்டர்நெட் சேவையை தடை செய்துள்ளனர். மின்சாரம், கழிப்பிட வசதிகளையும் தடை செய்துள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு வெளிநாட்டு பிரபலங்கள் ஆதரவான கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. பா.ஜனதா தலைவர்களும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் நடக்கும் விவசாயிகளின் போராட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தனது கருத்தை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-
அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களை, வளரும் ஜனநாயகத்தின் அடையாளமாக நாங்கள் அங்கீகரிக்கிறோம். இந்திய உச்ச நீதிமன்றமும் இதையே கூறி உள்ளது.
இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இந்தியாவின் சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா வரவேற்கிறது.
இண்டர்நெட் உட்பட தகவல் தொடர்புகள் தடையின்றி கிடைப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு அடிப்படையானது, வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் ஓர் அடையாளமாகும்.