72 ஆயிரம் பேரை மக்கள்தொகையாக கொண்ட குட்டி நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய மோடிக்கு டொமினிகா பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கரீபியன் தீவு நாடு, டொமினிகா. வெறும் 72 ஆயிரம் பேரை மக்கள்தொகையாக கொண்ட இந்த குட்டி நாட்டின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட், கொரோனா தடுப்பூசி கேட்டு பிரதமர் மோடிக்கு கடந்த மாதம் கடிதம் எழுதினார்.
இவ்வளவு குட்டி நாடான தனது நாட்டுக்கு தடுப்பூசியை பிரதமர் மோடி அனுப்பி வைப்பார் என அவர் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது, அவரை உருக வைத்து விட்டது. இதையொட்டி அங்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது நாட்டின் பிரார்த்தனைகளுக்கு இவ்வளவு விரைவாக பதில் கிடைத்து விடும் என்று நான் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். இது போன்ற ஒரு உலகளாவிய தொற்றுநோய்களை பொறுத்தமட்டில், நாட்டின் அளவு முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும். ஆனால், எங்கள் கோரிக்கையை பிரதமர் மோடி தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து, எங்கள் மக்களின் சமத்துவம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் என் இதயம்கனிந்த நன்றியையும், பாராட்டுகளையும் பிரதமர் மோடிக்கும், அவரது அரசுக்கும், இந்திய மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.