தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே முதல் கட்சியாக தலைமை தேர்தல் அலுவலகத்தை பாரதிய ஜனதா திறந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் 3 மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.
எந்த கட்சியும் இன்னும் கூட்டணியை உறுதிப்படுத்தாத நிலையில் பா.ஜனதா, அ.தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதி செய்தது.
அடுத்ததாக தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே முதல் கட்சியாக தலைமை தேர்தல் அலுவலகத்தையும் பா.ஜனதா திறந்துள்ளது.
கோயம்பேடு மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்தின் எதிரில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் கணபதி ஹோமமும் அதைத் தொடர்ந்து யாக பூஜையும் நடந்தது. யாக பூஜையில் தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன், பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், நடிகை குஷ்பு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
யாக பூஜைகள் நிறைவடைந்ததும் தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் குத்து விளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
தமிழக பா.ஜனதாவின் தேர்தல் கட்டுப்பாட்டு அறை இனி இங்கிருந்துதான் செயல்படும். அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து தேர்தல் பணி தொடர்பான உத்தரவுகள், தலைவர்களின் பிரசார பயண திட்டங்கள் போன்ற அனைத்து தகவல்களும் இங்கிருந்துதான் மாவட்டங்களுக்கு தெரிவிக்கப்படும்.
இதற்காக தொலை தொடர்பு வசதி, இணைய தள வசதி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் ஓரிரு தினங்களில் ஏற்படுத்தப்படும் என்று முருகன் தெரிவித்தார்.
திறப்புவிழா நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், எம்.என்.ராஜா, சக்கரவர்த்தி, வி.பி. துரைசாமி, டால்பின் ஸ்ரீதரன், மீனவர் அணி தலைவர் சதீஸ், மாநில மகளிர் அணி தலைவி மீனாட்சி, மாவட்ட தலைவர்கள் தனசேகர், சைதை சந்துரு, சென்னை சிவா மற்றும் தாஸ் பாண்டியன், டாக்டர் காயத்ரிதேவி, சரளா மகராஜன், டெய்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் அலுவலகம் திறந்ததும் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார்கள். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி அருகே பிரசாரம் தொடங்கியது.
பிரசாரத்தை அகில இந்திய செயலாளர் சி.டி.ரவி, தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து துறைமுகம் தொகுதியில் பிரசாரம் செய்தனர்.