லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மர்ம கும்பல், அதற்கு மாணவி உடன்படாமல் கடுமையாக எதிர்த்தால் அவரை தீ வைத்து எரித்துள்ளது. நிர்வாண நிலையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய மாணவியை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.
அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன்னாவில் ஒரு தலைக்காதலால் விஷம் கொடுத்து இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டனர். இன்னொரு மாணவி உயிருக்கு போராடியபடி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தற்போது கல்லூரி மாணவி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷஜகான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவி ஒருவர் நிர்வாண நிலையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடியபடி நேற்று முன்தினம் மாலை தவித்தார்- அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இது தொடர்பாக போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்தார். அவர் கூறுகையில். ராய்கேடா பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 3 பேர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். அது தோல்வி அடைந்ததால் அவர்கள் என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தினார்கள் என்று தெரிவித்துள்ளார்.
போலீசார் மாணவியின் கல்லூரியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவியின் செல்போன் அழைப்புகளில் உள்ள எண்கள், கல்லூரி நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.